Sunday, December 23, 2012

முப்பது ஆண்டுகளுக்குப் பின் முதல் சந்திப்பு




1980-83 ஆண்டுகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற ஒரு வகுப்பு நண்பர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர். கடந்த இரண்டு முறை நான் அதில் பங்குபெற முடியவில்லை. இந்த ஆண்டு 22.12.2012 சனிக்கிழமை மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா கழக விடுதியில் கூடுவதாக முடிவுசெய்து அந்தத் தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றும் அறிவுடைநம்பி எனக்கும் தெரிவித்திருந்தார். அங்கு போவது குறித்து முடிவெதுவும் எடுக்க முடியாத அளவுக்கு வேலைச் சுமை. அதனால் அவரிடம் உறுதிப்படுத்த முடியாத நிலை. 22 ஆம் தேதி காலை நான் ஸ்கூட்டரில் சாலையில் போய்க்கொண்டிருந்தபோது என் வகுப்புத் தோழன் பரிமளம் காரில் என்னைக் கடந்து போனவன் என்னைப் பார்த்துவிட்டு சப்தம் போட்டு நிறுத்தினான். அவனைப் பார்த்ததும் நானும் போவதென முடிவு செய்தேன்.

பகல் இரண்டு மணி அளவில் நானும் மாமல்லபுரம் போய்ச் சேர்ந்தேன். அங்கு பரிமளம், புகழேந்தி முதலான நண்பர்களோடு நான் சற்றும் எதிர்பார்க்காத மனோகரன் இருந்தார். ஏற்கனவே சிலர் வந்திருந்தனர். ராமச்சந்திரன், ரவிக்குமார், ராமர் என ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.அவர்களெல்லோரும் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்தார்கள். திருநெல்வேலி, கடலூர், திருவண்ணாமலை, சென்னை, தர்மபுரி, நாகர்கோயில் என நீண்ட தொலைவிலிருந்து வந்திருந்த நண்பர்களைப் பார்த்தபோது கல்லூரிக்காலம் நினைவில் நிறையத் தொடங்கியது.


நான் சட்டம் படிக்கவேண்டும் என விரும்பியதில்லை. நான் படித்த பி.ஏ டூரிஸம் என்ற இளநிலைப் பட்டப் படிப்புக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பு இல்லை. எம்.ஏ வில் வரலாறுதான் படிக்கவேண்டும். அதில் எனக்கு விருப்பமில்லை. அதன் காரணமாகவே  பி.எல் படிப்பில் சேர்வதென முடிவு செய்தேன். அண்ணாமலையில் 1978 ஆம் ஆண்டில்தான் பி.எல் படிப்பு தொடங்கினார்கள். மூன்றே பேட்சுகள்தான். நாங்கள் கடைசி பேட்ச். அத்துடன் அந்தப் படிப்பையே மூடிவிட்டார்கள்.முதல் பேட்சில் எனது நண்பர்கள் சிலர் சேர்ந்திருந்தனர். சீர்காழி தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருமுறை இருந்த பன்னீர்செல்வம் அந்த முதல் பேட்சில் சேர்ந்திருந்தார். அவர் சேர்ந்தவிதம் ஒரு தனிக் கதை.

பன்னீர்செல்வத்தால் அவரது வகுப்புத் தோழர்கள் பலர் எனக்கும் பழக்கமானார்கள். நான் , பன்னீர்செல்வம், பி.எஸ்.சி பாட்டனி படித்துக்கொண்டிருந்த தங்கராஜ் மூவரும் எப்போதும் ஒன்றாக இருப்போம். நாங்கள் ரயிலில் வந்து படித்துக்கொண்டிருந்தோம். பன்னீர் திருமயிலாடி என்னும் ஊரிலிருந்து வருவார். நாங்கள் இருவரும் கொள்ளிடத்தில் ஏறுவோம். அந்தப் பழக்கமும் நான் பி.எல் படிப்பைத் தேர்வுசெய்ய ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

எங்கள் வகுப்பில் மொத்தம் 61 பேர் இருந்ததாக நேற்று நண்பர்கள் சொன்னார்கள். அது எனக்கு நினைவில் இல்லை.அதில் 16 பேர் இம்முறை மாமல்லபுரம் வந்திருந்தார்கள். பலர் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக சந்தித்ததில் அவர்கள் குடும்பத்தினரும் ஒருவரோடு ஒருவர் அறிமுகமாகியிருந்தார்கள். கொஞ்ச நேரம் இருந்து எல்லோரையும் பார்த்துவிட்டுப் புறப்பட்டுவிடலாம் எனப் போன என்னால் அப்படி சுலபமாகக் கிளம்ப முடியவில்லை. இரவு எட்டரை மணிக்குத்தான் அவர்களிடமிருந்து விடைபெற முடிந்தது.

மாமல்லபுரம் வந்திருந்த நண்பர்கள் :

அறிவுடை நம்பி, சந்திரசேகரன்,பரிமளம்,ரவிக்குமார்,முருகன்,ஜெயராஜ்,ராமர்,மனோகரன்,ராமச்சந்திரன், தேவராஜ், புகழேந்தி,ராதாகிருஷ்ணன்,வைத்தியநாதன், பரமேஸ்வரி, நடனமணி. என்னைச் சேர்த்து 16 பேர்.  அவர்களில் சிலரது புகைப்படங்கள் இங்கே:
மனோகரன் 
புகழேந்தி 
பரிமளம் 








ரவிக்குமார் 




முருகன் 






No comments:

Post a Comment